சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Audio: https://www.youtube.com/watch?v=44b9bVlOxLk
3.065
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருக்கச்சிநெறிக்காரைக்காடு - பஞ்சமம் அருள்தரு காரார்குழலியம்மை உடனுறை அருள்மிகு காரைத்திருநாதஈசுவரர் திருவடிகள் போற்றி
வார் அணவு முலை மங்கை பங்கினராய், அம் கையினில்
போர் அணவு மழு ஒன்று அங்கு ஏந்தி, வெண்பொடி அணிவர்
கார் அணவு மணி மாடம் கடை நவின்ற கலிக் கச்சி,
நீர் அணவு மலர்ப்பொய்கை நெறிக்காரைக்காட்டாரே.
[ 1]
கார் ஊரும் மணிமிடற்றார், கரிகாடர், உடைதலை கொண்டு
ஊர் ஊரன் பலிக்கு உழல்வார், உழைமானின் உரி-அதளர்
தேர் ஊரும் நெடுவீதிச் செழுங் கச்சி மா நகர் வாய்,
நீர் ஊரும் மலர்ப்பொய்கை நெறிக்காரைக்காட்டாரே.
[ 2]
கூறு அணிந்தார், கொடியிடையை; குளிர்சடைமேல்
இளமதியோடு
ஆறு அணிந்தார்; ஆடு அரவம் பூண்டு உகந்தார்; ஆள் வெள்ளை
ஏறு அணிந்தார், கொடி அதன்மேல்; என்பு அணிந்தார், வரைமார்பில்,
நீறு அணிந்தார் கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டாரே.
[ 3]
பிறை நவின்ற செஞ்சடைகள் பின் தாழ, பூதங்கள்
மறை நவின்ற பாடலோடு ஆடலராய், மழு ஏந்தி,
சிறை நவின்ற வண்டு இனங்கள் தீம் கனிவாய்த் தேன் கதுவும்
நிறை நவின்ற கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டாரே.
[ 4]
அன்று ஆலின் கீழ் இருந்து, அங்கு அறம் உரைத்த அருள
குன்றாத வெஞ்சிலையில் கோள் அரவம் நாண் கொளுவி,
ஒன்றாதார் புரம் மூன்றும் ஓங்கு எரியில் வெந்து அவிய
நின்றாரும் கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டாரே.
[ 5]
Go to top
பல்மலர்கள் கொண்டு அடிக்கீழ் வானோர்கள் பணிந்து இறைஞ்ச,
நன்மை இலா வல் அவுணர் நகர் மூன்றும், ஒரு நொடியில்,
வில் மலையில் நாண் கொளுவி, வெங்கணையால் எய்து அழித்த
நின்மலனார் கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டாரே.
[ 6]
புற்று இடை வாள் அரவினொடு, புனை கொன்றை, மத மத்தம்,
எற்று ஒழியா அலைபுனலோடு, இளமதியம், ஏந்து சடைப்
பெற்று உடையார்; ஒருபாகம் பெண் உடையார்; கண் அமரும்
நெற்றியினார் கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டாரே.
[ 7]
ஏழ்கடல் சூழ் தென் இலங்கைக் கோமானை எழில் வரைவாய்த்
தாழ்விரலால் ஊன்றியது ஓர் தன்மையினார், நன்மையினார்
ஆழ் கிடங்கும், சூழ் வயலும், மதில் புல்கி அழகு அமரும்
நீள்மறுகின், கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டாரே.
[ 8]
ஊண்தானும் ஒலி கடல் நஞ்சு; உடை தலையில் பலி கொள்வர்
மாண்டார் தம் எலும்பு அணிவர்; வரி அரவோடு எழில் ஆமை
பூண்டாரும்; ஓர் இருவர் அறியாமைப் பொங்கு எரி ஆய்
நீண்டாரும் கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டாரே.
[ 9]
குண்டாடிச் சமண் படுவார், கூறை தனை மெய் போர்த்து
மிண்டாடித் திரிதருவார், உரைப்பனகள் மெய் அல்ல;
வண்டு ஆரும் குழலாளை வரை ஆகத்து ஒருபாகம்
கண்டாரும் கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டாரே.
[ 10]
Go to top
கண் ஆரும் கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டு உறையும்
பெண் ஆரும் திருமேனிப் பெருமானது அடி வாழ்த்தி,
தண் ஆரும் பொழில் காழித் தமிழ் ஞானசம்பந்தன்
பண் ஆரும் தமிழ் வல்லார், பரலோகத்து இருப்பாரே.
[ 11]
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருக்கச்சிநெறிக்காரைக்காடு
3.065
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வார் அணவு முலை மங்கை
Tune - பஞ்சமம்
(திருக்கச்சிநெறிக்காரைக்காடு காரைத்திருநாதஈசுவரர் காரார்குழலியம்மை)
This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400